மு.ஆனந்தன் எழுதிய ஆரவல்லி அழிப்பின் அரசியல் என்ற நூலின் வெளியீட்டு விழா தமுஎகச கோவை, நீதிமன்ற கூடுகைக் கிளை சார்பில் 23.08.2026 ஞாயிறு அன்று தாமஸ் கிளப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் கஸ்தூரி கண்ணன் வரவேற்க எஸ்.ராஜேஷ், அக்க்ஷியா இ.வெ. வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் ஆகியோர் பாடல்களுடன் அரங்கம் களை கட்டத்தொடங்கியது. கிளைத் தலைவர் கா.ப.ரகுமான் தலைமையேற்று பேசினார்.
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மேனாள் இயக்குனர் முனைவர் ஆர்.விஜயராகவன் அவர்கள் நூலை வெளியிட கௌசிகா நீர்க் கரங்கள் அமைப்பின் பா.க.செல்வராஜ் , கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் இரா.மணிகண்டன், கிரீன் கேர் அமைப்பின் கா. சையத் மற்றும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் மு.சிராஜ்தீன், பி.பி.மகேந்திரன் வழக்கறிஞர்கள் மு.கர்ணன் மற்றும் இரா.கலையரசு, ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் மற்றும் தமுஎகச கோவை மாவட்டச் செயலாலர் அ.கரீம் ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். திருமிகு ஆ.வனிதா, நேதாஜிபுரம் இலக்கிய வட்டத்தின் தலைவர் மூடாரம் மணி, கிளைச் செயலாளர் தென்றல் நிலா விஜய், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வழக்கறிஞர் பிரியா ரவி நன்றி கூறினார்.
நூலை வெளியிட்டுப் பேசிய முனைவர் விஜயராகவன் அவர்கள் நூலின் சிறப்புகளை பேசியதுடன் நூல் வெளியிடுவதில் உள்ள சிரமங்களையும் அதற்காக சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் திருமணத்திற்கு மொய் வைப்பது போல் நூல் வெளியீட்டு விழாவிற்கும் மொய் வைக்கும் பழக்கம் உள்ளது, அது படைப்பளிக்கு ஆதரவாக இருக்கும், அந்தப் பழக்கத்தை நாமும் கடைபிடிக்க வேண்டுமென சொல்லி, உடனே நூலாசிரியருக்கு ரூ 2,500/- மொய் வைத்துக் கொடுத்தார். அதற்கு நூலாசிரியர் இந்தத் தொகைக்கு நூலின் பிரதிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அன்புடன் வேண்டினார். அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அந்த ஆரவாரம் அடங்குவதற்குள் அடுத்த அதிர்வு தொடங்கியது.
நேதாஜிபுரம் இலக்கிய வட்டத் தலைவர் மூடாரம் மணி தனது வாழ்த்துரையில் நூலின் முக்கியத்துவத்தை பேசியதுடன் ஒவ்வொருவரும் குறைந்தது 10 நூல்களாவது வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தான் 100 பிரதிகளை வாங்குவதாகச் சொல்லி விழா மேடையிலேயே வாங்கிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து தமுஎகச மாவட்டத் துணைத் தலைவர் தி.மணி அவர்கள் 25 பிரதிகள், தமுஎகச கிழக்கு கிளை 25 பிரதிகள், புதூர் கிளை 35 பிரதிகள், மாவட்டக்குழு உறுப்பினர் வீரமணி 10 பிரதிகள், ராஜன் 10 பிரதிகள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் மருதமலை மகேஷ் 10 பிரதிகள் என விழா மேடையிலேயே 200 பிரதிகள் விற்பனையானது.
கோவை சதாசிவம் தனது கருத்துரையில் 200 கோடி ஆண்டுகள் தொன்மையான ஆரவல்லி மலையின் சிறப்புகளையும் முக்கியத்துவத்தையும் தற்போது அதை அழிப்பதற்கான அரசியலையும் எப்படி நூல் விவரிக்கிறது என்பதை கச்சிதமாக எடுத்துரைத்தார். வட இந்தியாவில் உள்ள ஆரவல்லி மலையைக் குறித்து தமிழகத்தில் வாழும் ஆனந்தன் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வியை முன் வைத்து, 200 கோடி ஆண்டுகள் தொன்மையான ஆரவல்லியைப் பற்றி அதைவிட தொன்மையான 230 கோடி ஆண்டுகள் வயதான கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் ஆனந்தன் தான் எழுத முடியம் என்றார்.
இறுதியில் நூலாசிரியர் மு.ஆனந்தன் தனது ஏற்புரையில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஆரவல்லி மலைத் தொடர் மார்பிள், கிரைனெட் கற்களுக்காக சுரங்க மாபியாக்களால் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வந்தது என்றும் தற்போது ஒன்றிய பாஜக அரசு அணுசக்திச் சட்டம், சுரங்க மற்றும் கணிம வள சட்டங்களையெல்லாம் திருத்தி யுரேணியம், தோரியம் உள்ளிட்ட 6 அணுக் கனிமங்களையும் உயர் தொழில்நுட்பத்திற்கு பயன்படும் 26 முக்கிய கனிமங்களையும் தோண்டி எடுப்பத்தற்கும் பயன்படுத்துவதற்கும் தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது என்றும் அதன் மூலம் அந்தக் கனிமங்களுக்காக ஆரவல்லி மலையை கார்ப்ரேட்டுகளுக்கு அடகு வைக்கும் முயற்சியையும் அவ்வாறு கார்ப்ரேட்டுகள் கைகளில் ஆரவல்லி மலை சிக்கினால் அது விரைவில் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் அதை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டுமென்பதற்காகவே இந்த நூலை எழுதியதாகப் பேசினார். ஒரு மலைத்தொடரில் அடர்ந்த காட்டுக்குள் பயணித்த அனுபவம் கிடைத்ததாகவும் ஆரவல்லி குறித்து பல்வேறு புதிய விசயங்களை தெரிந்து கொண்டதாகவும் தற்போதைய இயற்கை வளங்கள் அழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதாகவும் பங்கேற்பாளர்கள் பகிர்ந்து சென்றனர்.
ஆரவல்லி அழிப்பின் அரசியல்
நூலாசிரியர் - மு.ஆனந்தன்
வெளியீடு:பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்:32
விலை: ரூ.30/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

Add comment