Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர் – தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் 1954ல் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்… என மாறி மாறி பணியாற்றியவர்.
அதன் பின்னர் 90களில் பொதுமக்களிடையே படிப்பறிவை, எழுத்தறிவை, கற்றலின் முக்கியத்துவத்தை பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதறகாக அஞ்சலக பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு வீச்சில் இயக்கியவர்.
1978ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து மாநில செயலாளராக, தலைவராக பணியாற்றி தற்போது மதிப்புறு தலைவராக செயலாற்றி வருகிறார். தற்போது தனது இணையர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாய் அவர்களுடன் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் சித்தார்த் சென்னையில் தனது இணையர், மற்றும் குழந்தைகளோடு வசிக்கிறார்.
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் தாய்வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் “பாலகான சபா” என்ற நாடககுழு அமைத்து தமிழகம், இலங்கை என பல பகுதிகளிலும் நாடகங்கள் நடத்தியவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற இசை ஆளுமைகளுக்கே இசை கற்பித்த ஆசான். எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் ச.முருகபூபதி இருவரும் இவரது சகோதரர்கள்.
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முக்கியமான படைப்புகள் வெயிலோடு போய் -1984-சிறுகதைகள், வாளின் தனிமை-1992- சிறுகதைகள், மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-2006, இருளும் ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள், ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள், ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது, இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள், அரசியல் எனக்குப் பிடிக்கும்- 3 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனை, நான் பேச விரும்புகிறேன் – சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள், வீரசுதந்திரம் வேண்டி – (ஜா.மாதவராஜுடன் இணைந்து), பெண்மை என்றொரு கற்பிதம், பேசாத பேச்செல்லாம், இருவர் கண்ட ஒரே கனவு, சந்தித்தேன், வலையில் விழுந்த வார்த்தைகள், அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள், ஒரு சாப்பாட்டுராமனின் நினைவலைகள், எசப்பாட்டு-ஆண்களோடு பேசுவோம் என சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரை தொகுப்புகள், இடதுசாரி முற்போக்கு அரசியல் ரீதியிலான பல நூல்களை எழுதியுள்ளார்.
வெளியான சிறு நூல்கள்
1. 1947
2. 1806
3. நமக்கான குடும்பம்
4. வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்
5. அலைகொண்ட போது.. – சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம்
6. தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்
7. பிள்ளை பெற்ற பெரியசாமி-படக்கதை
8. எது கலாச்சாரம்?
9. அறிவொளி புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் 30- க்கு மேல் என தமிழ் வாசக உலகிற்கு அதி முக்கியமான படைப்புக்களை கொடுத்துள்ளார்.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Sa.TamilSelvan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com
©2026 - Thamizhbooks.com