Description
ஔவை எழுதிய ஆத்திசூடி நூலின் அர்த்தம் தெரியாத பெரியவர்கள் இன்றும் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி எனில், சிறுவர்களுக்கு? அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு, இக்காலச் சூழலுக்கு ஏற்ப, நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நாடக வடிவிலான பள்ளிக் கல்விக்கு உதவிடும் வகையில் சிறுவர்களுக்காக எளிமையான வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் நிச்சயம் இந்த நாடகங்களை அரங்கேற்றலாம்.
வி.எஸ்.சரவணன் –
தமிழ்ப் பாடம் பிடித்துப் படிப்பவர்களுக்கும் செய்யுள் பகுதியை மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கும். வரிகளும் வார்த்தைகளும் கடினமாக இருப்பதால் அப்படி. ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் சுவையாகச் சொன்னால், மனதின் ஆழத்தில் பதியும். மனப்பாடப் பகுதியும் அப்படித்தான். ஒளவையார் எழுதிய ஆத்திசூடி, படிப்பதற்கு மிக எளிதுதான் என்றாலும், அதைக் காட்சிகளாக மாற்றினால், அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில் குழப்பமே ஏற்படாது அல்லவா. அதற்கான அழகான வழிகாட்டிதான் ‘அறம் செய்ய விரும்புவோம்’ எனும் நூல். ஆத்திசூடியில் அ முதல் ஃ வரை, ஒவ்வொரு வரியையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில், தனித்தனி நாடகங்களாக எழுதியிருக்கிறார் மோ.கணேசன்.
ஒரு பத்திரிகையில் பணிபுரிபவர், தமிழ்வாணன். அவரின் மனைவி, தாமரை. பிள்ளைகளாக ஆதித்தன் மற்றும் அகிலன். இந்த நான்கு பேரும்தான் இந்த நூலில் மையமாக வருகிறார்கள். பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் சிறப்பான நூல், ‘அறம் செய்ய விரும்புவோம்!’
– வி.எஸ்.சரவணன்